மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியரை தாக்கி மண்டையை உடைத்த பெற்றோர்! பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரு: தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி, உடற்பயிற்சி ஆசிரியரை அடித்து உதைத்த, மாணவிகளின் பெற்றோர்கள், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பள்ளி வளாகமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
பெங்களூரு, பேட்டராயனபுரா பகுதியிலுள்ள ஹொசகுட்டஹள்ளி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் 8 வயது மாணவி உட்பட சில மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தந்துவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள், பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவுக்காரர்கள் இன்று காலை பள்ளி தொடங்கும் நேரத்தில் பள்ளிக்கு வந்துள்ளனர்.

பள்ளியில் குழந்தைகளை விட வந்த சக பெற்றோர்களிடமும் இதுகுறித்து அந்த மாணவிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான பெற்றோர் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். மேலும்பல பெற்றோரும், தங்கள் குழந்தைக்கும் இதுபோன்ற தொல்லைகளை உடற்கல்வி ஆசிரியர் கொடுத்து வந்ததாக அப்போது தெரிவித்தனர்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியர் கிருஷ்ணாவை கைது செய்து ஜீப்பில் ஏற்ற அழைத்து வந்தனர். ஆனால் அதற்குள் கூட்டத்தில் இருந்த சிலர் ஓடிச் சென்று ஆசிரியரை இழுத்து கொலைவெறியோடு அடித்தனர். அதில் கிருஷ்ணாவின் சட்டை, பனியன் கிழிந்தது. மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.
படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே பள்ளி மீது பெற்றோர் கல் வீசி போராட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்ட பெற்றோர் குவிந்து பள்ளிக்குள் நுழைந்தனர். பள்ளியின் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் பெற்றோரை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்படியும் கலையாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் கோபமடைந்த பெற்றோர், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் சில போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெங்களூரு பேட்டராயனபுரா பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கிறது. இருப்பினும் ஆசிரியருக்கு எதிராக போலீசாரிடம் இதுவரை பெற்றோர்கள் புகார் அளிக்கவில்லை. ஆசிரியரை தங்களிடம் ஒப்படைத்துவிடுமாறும், தாங்களே தண்டனை கொடுத்துக்கொள்வதாகவும் பெற்றோர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
பேட்டராயனபுரா பகுதி ஏழை, எளியவர்கள் அதிகம் வசிக்கும், நெருக்கடியான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications