வாகனங்கள் ஸ்டிரைக்: பெங்களூரு, புதுவையில் பேருந்துகள் மீது கல்வீச்சு.. தவித்த பொதுமக்கள்!!
டெல்லி: மத்திய அரசின் சாலை புதிய மோட்டார் வாகனம் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முழுவதும் இன்று ஒரு நாள் பஸ், லாரி, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தங்களை செய்து வருகிறது.
மத்திய அரசின் சட்டதிருத்த வரிசையில் தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் (1988) முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2015 என்ற சட்ட முன் வடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசு அதிகாரம் பறிப்பு
மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாக பறித்து மத்திய அரசு சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது.
இச்சட்டத்தால் சாலை போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களான ஓட்டுனர்கள், வாகன பராமரிப்பு பணியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு.

ஒருநாள் வேலை நிறுத்த முடிவு
இத்தகைய சட்டத்தினை நடைமுறைபடுத்த மத்திய அரசு மக்களின் கருத்தறிய எந்த வித வாய்ப்பும் அளிக்கப்படாமலேயே நிறைவேற்ற முனைகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியில் சேவைத்துறையில் 4% சதவிகித வளர்ச்சியை வழங்கி வரும் சுமை மற்றும் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாலை போக்குவரத்து அமைப்பையே இச்சட்டம் சீர்குலைக்கும் என்பதோடு சாலைபோக்குவரத்து தொழிலாளர்களை மற்றும் மாநில பொதுபோக்குவரத்து அமைப்புகளை சீர்குலைக்கும் இச்சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் தொழிலாளர் அமைப்புகள் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

டெல்லி, மும்பையில் முழு ஸ்டிரைக்
டெல்லி, மும்பை, அகமதாபாத், பாட்னா, லக்னோ நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்வோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பேருந்துகளும் குறைவான அளவுதான் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கொல்கத்தாவில் தடியடி
கால்டாக்சிகள் மட்டுமே பிரதானமாக ஓடும் கொல்கத்தா நகரில் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசின் இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிஷா, அஸ்ஸாம்
ஒடிஷா, அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் இந்த வாகனங்கள் வேலைநிறுத்தம் முழுமையாக நடந்தது.

பெங்களூரு, புதுவையில் கல்வீச்சு
தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் நகரங்களிலும் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
கர்நாடகா மாநிலத்தில் இயக்கப்பட்ட 15 அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியிலும் 5 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கல்வீச்சு தாக்குதலுக்குள்ளாகின.

சென்னையில் குறைவு
சென்னையில் அரசுப் பேருந்துகளும் மிகக் குறைவான அளவே இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளைக் கூட தற்காலிக பணியாளர்களே ஓட்டினர்.

தமிழகத்தில் 2 லட்சம் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஆட்டோக்கள் இன்று இயக்கப்படவில்லை. சென்னையில் ஆட்டோவின் பங்கு முக்கியமானது. ஆட்டோக்கள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

எல்லைகளில் நிறுத்தம்
கர்நாடகா- தமிழகம் இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் அனைத்தும் எல்லைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் அவர்கள் அங்கிருந்து பிற மாநிலங்களுக்குள் செல்வதற்கு வாகனம் கிடைக்காமல் விழிபிதுங்கி நின்றனர்.

3.5 லட்சம் லாரிகள்
தமிழ்நாடு முழுவதும் 3.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார். மேலும் 7 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் எல்.பி.ஜி. கேஸ் ஏற்றிச் செல்லும் 3 ஆயிரத்து 200 லாரிகளும் இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

70 ஆயிரம் மணல் லாரிகள்
தமிழ்நாடு முழுவதும் 70 ஆயிரம் மணல் லாரிகள் ஓடவில்லை என்று மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லராஜாமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications