வங்கிகளில் உள்ள ரூ.350 கோடி பணத்தை எடுத்து விடுங்கள்: படேல் சமூகத் தலைவர்கள் அதிரடி கோரிக்கை
அகமதாபாத்: படேல் சமூகத்தினர் வங்கிகளில் போட்டு வைத்துள்ள ஒட்டு மொத்த பணத்தையும் எடுத்துவிடுங்கள் என்று படேல் சமூகத்தினருக்கு அந்தச் சமூகத்தின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக பொருளாதார ஒத்துழையாமை இயக்கத்தை அவர்கள் தொடங்கவுள்ளனர்.
இதுகுறித்து சர்தார் படேல் குழு என்ற படேல் சமூக அமைப்பின் தலைவர் லால்ஜி படேல் கூறியதாவது:
படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சுமார் 70 லட்சம் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ஏறத்தாழ சுமார் ரூ. 50,000 பணம் உள்ளது.
மொத்தம் படேல் சமூகத்தினரின் பணம் ரூ. 350 கோடி வரை வங்கிகளில் உள்ளது. இந்நிலையில், எங்களுடைய இடஒதுக்கீட்டு கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால் வங்கிகளில் இருப்பு வைத்துள்ள பணம் முழுவதையும் எடுத்துவிடுமாறு எங்கள் சமூகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இப்போதே சிலர் பணம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். எங்களுடைய இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு அமெரிக்காவில் வசிக்கும் படேல் சமூகத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு லால்ஜி படேல் கூறினார்.