மீண்டும் ராகுல் காந்தி அதிரடி...மோடி பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக தாக்கு!
டெல்லி: மாற்றத்திற்கான அரசியல் என்று கூறித்தான் ஆட்சியைப் பிடித்தார் பிரதமர் மோடி. ஆனால் பழிவாங்கும் அரசியலில் அவர் தீவிரமாக உள்ளார். தனது உறுதி மொழியிலிருந்து அவர் மீறி விட்டார் என்று போட்டுத் தாக்கியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி பேசும்போது மீண்டும் அதிரடியான பேச்சை அவர் வெளிப்படுத்தினார். லோக்சபாவில் நான்காவது முறையாக அனல் பறக்கப் பேசியுள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாக விடுமுறையில் போய் விட்டு திரும்பிய பின்னர் ராகுல் காந்தி நான்காவது முறையாக மோடி அரசுக்கு கடுமையான தாக்குதல் கொடுத்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராகுல் காந்தியின் பேச்சிலிருந்து....
லோக்சபா தேர்தலின்போது அமேதிக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி 52 நிமிடம் பேசினார். அவரது பேச்சைக் கேட்டு நானே கூட அசந்து போய் விட்டேன். மாற்றத்திற்கான அரசியலைத் தான் தரப் போவதாக அவர் உறுதியளித்துப் பேசினார். நானும் கூட பேச்சு நன்றாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன். மக்களும் அவரது பேச்சை நம்பினர். ஆனால் இப்போது அவர் தனது வாக்குறுதியை மீறி விட்டார். பழிவாங்கும் அரசியலில் அவர் ஈடுபட்டுள்ளார். மக்களைப் போல நானும் இப்போது ஏமாற்றமடைந்துள்ளேன்.
அமேதி தொகுதியில் உணவுப் பூங்கா அமைக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டது மோடி அரசு. நிலம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி ரத்து செய்துள்ளனர். இதனால் அமேதி மக்கள் கோபமடைந்துள்ளனர் என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி அமேதி தொகுதியின் எம்.பி. ஆவார் என்பது நினைவிருக்கலாம். அங்கிருந்து 3வது முறையாக அவர் லோக்சபாவுக்கு் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அமேதி தொகுதியை அதி நவீன வசதி கொண்ட தொகுதியாக மாற்றப் போவதாக ஏற்கனவே பாஜக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் அங்கு உணவுப் பூங்கா அமைப்பதை ரத்து செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications