தெலுங்கானாவின் தாகத்தைத் தீர்த்த பிரகாஷ் ராஜ்.. தமிழகத்திற்கும் பாசம் காட்டலாமே!
சென்னை: தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளார் ஏராளமான தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.
தமிழ்ப் படங்கள்தான் பிரகாஷ் ராஜுக்கு இந்தியத் திரையுலகில் அவருக்கு நல்லதொரு அடையாளத்தைக் காட்டியது. திரை ரசிகர்களின் செல்லமாக அவரை மாற்றியது தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து அன்பும், ஆதரவும்தான். இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை சரி செய்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கம்மடனம் என்ற கிராமத்தை பிரகாஷ் ராஜ் தத்தெடுத்துள்ளார். அங்கு குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து அந்தக் கிராமத்தினா் பிரச்சினைகளை சரி செய்ய களம் இறங்கினார் பிரகாஷ் ராஜ். கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய ஆரம்பித்தார். குடிநீர்ப் பிரச்சினைதான் பெரிதாக இருந்தது என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அங்கு கிணறுகள் தோண்டி மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து விநியோகிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதன் மூலம் அந்தக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை முழுமையாக தீர்ந்துள்ளதாம்.
தமிழகத்திலும் ஏதாவது ஒரு கிராமத்தை பிரகாஷ் ராஜ் தத்தெடுக்கலாமே.. நல்லது செய்யலாமே!












Click it and Unblock the Notifications