லாலு கோட்டையில் சம்பவம் செய்த பிரசாந்த் கிஷோர்! சட்டென எகிறும் ஆதரவு.. உற்று பார்க்கும் பாஜக!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அங்கு லாலு பிரசாந்த் யாதவின் கோட்டையாகக் கருதப்படும் சீதாம்ரஹியில் பிரசாந்த் கிஷோர் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு அதிகப்படியான மக்கள் திரண்ட நிலையில், அது அரசியல் அரங்கிலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
பீகாரில் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு ஒரு பக்கம் நிதிஷ்குமார்- பாஜக கூட்டணி, மறுபுறம் காங்கிரஸ் லாலு யாதவ் கூட்டணி இருக்கிறது. இதுபோக பிரபலத் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் தனியாகப் போட்டியிடுகிறார். அவரது கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடும் எனச் சமீபத்தில் அறிவித்தார். இதன் மூலம் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகாரின் சீதாமர்ஹியில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பீகார் தேர்தலுக்கு முன்பு தனது கட்சியின் பலத்தைக் காட்டும் வகையில் பிரசாந்த் கிஷோர் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளார்.
மிரள வைத்த கூட்டம்
இதில் சீதாமர்ஹி என்ற இடத்தில் பிரசாந்த் கிஷோருக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதே பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த சீதாமர்ஹி என்பது ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஜன் சுராஜ் சார்பில் பீகார் முழுக்க பட்லாவ் யாத்திரை நடத்தப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே சீதாமர்ஹியில் பிரசாந்த் கிஷோர் இந்த கூட்டத்தை நடத்தினார்.
பிரசாந்த் கிஷோர் இப்போது பீகார் பட்லாவ் என்ற யாத்திரை நடத்தி வருகிறார். அங்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு மாநிலம் முழுக்க மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டே பிரசாந்த் கிஷோர் இந்த யாத்திரையை நடத்துகிறார். அதன் ஒரு பகுதியாகவே சீதாமர்ஹியின் ரிகா தொகுதியில் இந்த அங்குப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கடும் சாடல்
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் பாஜக, ஆர்ஜேடி, காங்கிரஸ், ஜேடியு என அனைத்துக் கட்சிகளையும் அவர் விமர்சித்தார். பிரசாந்த் கிஷோர் மேலும் பேசுகையில், "எனது தாத்தா இதே பீகாரில் மாட்டு வண்டி ஓட்டினார். நான் ஒரு அரசுப் பள்ளியில் படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன்.. கடந்த 10-15 ஆண்டுகளில், நான் எந்தக் கட்சிக்கு ஆலோசனை வழங்கினேனோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர்.
யாரும் வளர்ச்சியைத் தரவில்லை
ஆனால் இப்போது நான் அந்த வேலையை விட்டுவிட்டேன். தேர்தலில் வெற்றி பெறுபவர் மன்னராக நினைத்து ஹெலிகாப்டரில் பறந்து விடுகிறார். ஆனால் நம்மை அப்படியே விட்டுவிடுகிறார்கள். முன்பு நீங்கள் 40-45 வருடங்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தீர்கள். பின்னர், 15 வருடங்கள் ஏழைத் தாயின் மகனான லாலு யாதவை முதலமைச்சராக்கினீர்கள். கடந்த 20 வருடங்களாக நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். லோக்சபா தேர்தலில், நீங்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தீர்கள். ஆனால் பீகார் குழந்தைகளின் எதிர்காலம் மேம்படவே இல்லை.
யோசித்து வாக்களிக்க வேண்டும்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் இளைஞர்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை மனதில் நினைத்து வாக்களிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வாக்களியுங்கள். கோவில்கள் மற்றும் மசூதிகளை நினைத்து வாக்களித்தால், உங்களுக்கு எப்படி வளர்ச்சி கிடைக்கும்? சாதியின் அடிப்படையில் வாக்களித்தால், உங்கள் குழந்தைகள் எப்படி நல்ல கல்வி பெற முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications