ஜனாதிபதி மாளிகையில் ஆளுநர்கள் மாநாடு- உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அனைத்து ஆளுநர்கள் மாநாடு துவங்கியது.
டெல்லி : டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில், இரண்டு நாள் நடைபெறவுள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மாநாடு துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் அனைத்து மாநில ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாடு ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பு உட்பட நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். மேலும், தூத்துக்குடி சம்பவம் குறித்து அறிக்கையை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.