இளநீரும், வெறும் தரையும்! ராமருக்காக மோடி 11 நாள் கடும் விரதம்.. பிரசாதம் சாப்பிட்டு நிறைவு செய்தார்
அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. 73 வயதான பிரதமர் மோடி கடும் விரதமிருந்து 7 புனித தலங்களில் தரிசனம் செய்து இறுதியாக ராமர் சிலையை இன்று பிரதிஷ்டை செய்திருக்கிறார். இவரது விரதத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளரான கோவிந்த் தேவ் குருஜி, பிரசாதம் கொடுத்து நிறைவு செய்துள்ளார்.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து, இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரமானது, பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் காலம் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
பிரதிஷ்டைக்கு முன்னதாக அவர் கடுமையான விரதங்களை மேற்கொண்டிருந்தார். 73 வயதான மோடி, கடந்த 11 நாட்களும் இளநீர் பருகி, சாத்வீக உணவை மட்டுமே எடுத்துக்கொண்டு, வெறும் தரையில் மெத்தை, தலையணை இல்லாமல் போர்வையுடன் மட்டுமே உறங்கி வந்திருக்கிறார். சாத்வீக உணவு என்பது வெங்காயம், பூண்டு உள்ளிட்டவை இல்லாம் தயாரிக்கப்படும் விரத உணவாகும். இவ்வளவு கடுமையான விரத்தை கடந்த 12ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயிலில் அவர் தொடங்கினார். இக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையதாகவும், இக்கோயிலில் தரிசனம் செய்த அவர், பவார்த் ராமாயணத்தின் ஸ்லோகங்களை பாராயணம் செய்தார்.
அதன் பின்னர், கடந்த 16ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தியின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் வழிபாடு நடத்தி, ரங்கநாத ராமாயணத்தை பாராயணம் செய்தார். பின்னர் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் கோயில், திரிபிரயார் ஸ்ரீ ராமசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரத்தில் சுவாமியை தரிசனம் செய்து, ஸ்லோகங்களை பாராயணம் செய்தார்.
இறுதியாக தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர் கடலில் நீராடினார். இதனையடுத்து இன்று அயோத்தியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இத்தனை நாட்களும் கடுமையான விரதத்திலிருந்து கொஞ்சம் கூட அவர் தடுமாறவில்லை. பிரதிஷ்டை முடிந்துள்ள நிலையில் மோடியின் விரதத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளரான கோவிந்த் தேவ் குருஜி, பிரசாதம் கொடுத்து நிறைவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications