பல்வேறு துறை செயலாளர்களைச் சந்தித்தார் மோடி.. தனது திட்டங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கம்
டெல்லி: நேற்று மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களிடம் திட்டங்களை செயல்படுத்துவதில் தனது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கினார்.
16வது லோக்சபாவுக்கு நடைபெற்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி. நாட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பத்து அம்ச திட்டம் ஒன்றை தயாரித்தார். தமது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் இந்த பத்து அம்சதிட்டம் குறித்து நூறு நாள் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து கடந்த 3ம் தேதி பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தார் மோடி. ஆனால் எதிர்பாராத வகையில், அன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே காலமானார். இதனால், செயலாளர்களுடனான சந்திப்பினை மோடி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்கு நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோசுவாமி, ராணுவ செயலாளர் ராதாகிருஷ்ண மாத்தூர், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் உள்ளிட்ட 77 மூத்த அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தனது விருப்பங்களையும், முன் உரிமைகளையும் பிரதமர் மோடி விளக்கினார் என்றும், அதிகாரிகளிடம் தனக்கு உள்ள எதிர்பார்ப்புக்களையும் அவர் தெரிவித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் பணவீக்கம், நிதி திரட்டுதல், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தல், வரி நிர்வாகத்தின் தெளிவினை ஏற்படுத்துதல், உருக்கு, சிமெண்டு உள்ளிட்ட முக்கியமற்ற துறைகளில் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்தல் பற்றிய குறிப்புகளுடன் பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், ராணுவத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்குதல், மின்னணு சில்லறை வர்த்தகம், ரயில்வே மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தடைகள், திட்ட அனுமதியில் உள்ள முட்டுக்கட்டைகள் பற்றிய தகவல்களுடன் வர்த்தகத்துறை செயலாளர் ராஜீவ் கெர், பிரதமர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
பருவமழை, பயிர்ச்சாகுபடியில் தோல்வி அடையும்போது, விவசாயிகளைக் காக்க புதிய காப்பீடு உள்ளிட்ட குறிப்புகளுடன் விவசாயத்துறை செயலாளர் ஆசிஷ் பகுகுணாவும், வெங்காய விலை ஏற்றம் பற்றிய குறிப்புடன் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகளும், நிலுவையில் உள்ள முடிவு எடுக்க வேண்டிய விவகாரங்கள் குறித்த குறிப்புடன் எண்ணெய்த்துறை அமைச்சக அதிகாரிகளும், உருக்கு மற்றும் சுரங்கங்கள் அமைச்சக அதிகாரிகள் செயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, மூடப்பட்ட சுரங்கங்களை மீண்டும் திறப்பது உள்ளிட்டவை பற்றிய குறிப்புடனும் சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பு பதவியில் இருந்த பிரதமர்கள் யாரும் இத்தகைய சந்திப்புகளை நடத்தியதாக தகவல் இல்லை. எனவே, மத்திய அமைச்சர்கள் இல்லாமல் துறை செயலாளர்களுடன் மட்டும் நாட்டின் பிரதமர் கலந்துரையாடியது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications