சோனியாவுக்கு பதிலாக காங். தலைவராகிறார் ராகுல் காந்தி! இம்மாதமே அறிவிப்பு வெளியாகிறது?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் புதுச்சேரியை தவிர்த்து காங்கிரஸ் கட்சி பிற பகுதிகளில் சரிவையே சந்தித்தது. போட்டியிட்ட இடமெல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. எல்லாவற்றுக்கும் மேலாக, கேரளத்திலும் அசாமிலும் தங்கள் வசமிருந்த ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள சோனியா காந்திக்கு பதிலாக துணை தலைவர் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் நிர்வாகிகள் முன்வைக்க தொடங்கியுள்ளனர். மூத்த நிர்வாகிகள் சோனியாவே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது.

உ.பி தேர்தல்
உத்தரபிரதேச மாநில தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கு முன்பாக ராகுல்காந்தியை தலைவராக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆதரவு நிர்வாகிகள் வாதமாக உள்ளதாம்.

இரு வாரங்களில் முடிவு
அடுத்த ஓரிரு வாரங்களில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு கூட்டத்தில் அடுத்த தலைவர் விவகாரம் விவாதிக்கப்படும் என்றும் அப்போது ராகுல் காந்தியை தலைவராக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணி கட்சிகள்
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறுகையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. சோனியாவுடன் இணைந்து பணியாற்றிய திமுகவால் ராகுல் காந்தி போன்ற தலைவரோடு இணைந்து செயலாற்ற முடியாது. இதுபோல பல கூட்டணி கட்சிகளும் காங்கிரசைவிட்டு விலக தொடங்கும் என்றார்.

குடும்ப கட்சி
பாஜகவோ, இது ஒரு குடும்ப கட்சி என்று மாறிப்போனது. 60 வருடங்களாக ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சிக்கியுள்ளது. ராணி தனது இளவரசனை தேர்ந்தெடுப்பதை போல ஒரு கட்சி செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications