டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 18 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் ஆதரவு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக திமுக எம்பி திருச்சி சிவா, கனிமொழி, ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன், தமிழக அமைச்சர் துரைக்கண்ணு, லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்தி
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தரையில் அமர்ந்து போராட்டம்
தமிழக விவசாயிகளுடன் கீழே தரையில் அமர்ந்து ராகுல்காந்தி பேசினார். விவசாயிகள் அப்போது தங்களின் குறைகளை ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். பச்சைக்கலர் துண்டு அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு போராட்ட களத்தில் ராகுல்காந்தி அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications