பனாரஸ் பல்கலை. ஐ.ஐ.டி.யில் ரயில்வே தொழில்நுட்ப ஆய்வுக்கு "மாளவியா இருக்கை"
டெல்லி: வாரணாசி பனாரஸ் பல்கலைக் கழகத்தின் ஐ.ஐ.டி.யில் ரயில்வே தொழில்நுட்ப ஆய்வுக்காக "மாளவியா இருக்கை" அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட மதன் மோகன் மாளவியா நிறுவிய வாரணாசி பனாரஸ் பல்கலைக் கழகத்துக்கு இது நூற்றாண்டாகும்.
இதை சிறப்பிக்கும் வகையில் ரயில்வே தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக பனாரஸ் பல்கலைக் கழகத்தின் ஐ.ஐ.டி.யில் "மாளவியா இருக்கை" என்ற பிரிவு உருவாக்கப்படும்.

இதேபோல் குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் 4 ரயில்வே ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். ரயில்வே துறை மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பண்டித மதன் மோகன் மாளவியா. அதே நேரத்தில் இந்துத்துவா கொள்கைகளில் தீவிர நாட்டம் காட்டியவர். இதனாலேயே இந்து மகாசபை என்ற தனி அமைப்பையும் உருவாக்கியவர் மாளவியா.
இந்த இந்துமகாசபைதான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளுக்கு தாய் அமைப்பாகும். இதனால்தான் வாரணாசியில் மாளவியா சிலைக்கு முதலில் மரியாதை செலுத்திவிட்டுத்தான் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அதேபோல் அண்மையில் கூட மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதையும் கொடுத்தது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications