ஆசிரியர் அடித்ததால் அவமானத்தில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆசிரியர் அடித்ததால் அவமானத்தில் 16 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் உள்ள ராம்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் தில்குஷ் சஹாரியா(14). அவர் பன்ஸ்துனி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த அவரை முகுத் பீகாரி என்ற ஆசிரியர் பிற மாணவர்கள் முன்பு அடித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த சஹாரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
முன்பு ஒரு முறை நான் வீட்டுப்பாடம் செய்யாதபோது என் ஆசிரியர் என்னை பார்த்து நீ எல்லாம் செத்தால் என் பாரம் குறையும் என்றார். நான் எப்பொழுது எல்லாம் வீட்டுப்பாடம் செய்யாமல் போகிறேனோ அப்போதெல்லாம் முகுத் ஜி என்னை அடித்தும், அவமானப்படுத்தியும் உள்ளார். இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்.
போலீஸ் அங்கிள் அவருக்கு தண்டனை அளியுங்கள். அவரை மன்னித்துவிடாதீர்கள். இது தான் நான் உங்களை கேட்டுக் கொள்வது என்று அதில் தெரிவித்துள்ளார்.
சஹாரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக முகுத் பீகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் ராஜஸ்தானில் நடந்துள்ள இரண்டாவது தற்கொலை இது. முன்னதாக வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்த அவமானம் தாங்க முடியாமல் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.