ராஜ்யசபாவில் சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த ராஜ்யசபா உறுப்பினர் ஹனுமந்த ராவ் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்தமைக்காக ஒருநாள் பதவி இடைநீக்கத்துக்கு உள்ளானார்.
ராஜ்யசபா இன்று கூடியதும், மதமாற்றம் குறித்தும், கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்தும் பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். லோக்சபாவில் மோடி பதிலளித்த நிலையில் இங்கும் அதையே சொல்ல வேண்டியது அவசியமில்லாதது என்று ஆளும் கட்சியினர் கூறினர்.
இதனால் அவையில் பெரும் அமளி நிலவி வந்தது. இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பியான வி.ஹனுமந்தராவ், ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசினார். அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார். மேலும் விதிமுறை 255ன்கீழ், ஹனுமந்தராவை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வதாகவும் அன்சாரி தெரிவித்தார்.
இதையடுத்து அவையில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அன்சாரி உத்தரவிட்டார்.