பதன்கோட் தாக்குதலுக்கு கந்தஹார், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கிய மூளை அஸ்கரே காரணம்
டெல்லி: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் ரவுப் அஸ்கர் தான் பதன்கோட் தாக்குதலின் முக்கிய மூளை என்பது தெரிய வந்துள்ளது.
கந்தஹார் விமான கடத்தலை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பதன்கோட் தாக்குதலும் அதற்கு குறைந்தது அல்ல. கந்தஹார் விமான கடத்தலுக்கு முக்கிய மூளையாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மவுலானா மசூத் அசாரின் சகோதரர் ரவுப் அஸ்கர் தான் பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவராக மசூத் அசார் இருந்தாலும் தாக்குதல்களை நடத்த முக்கிய மூளையாக செயல்படுவது அவரது சகோதரர் அஸ்கர் தான். பதன்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த தொலைத்தொடர்பு பேச்சில் அஸ்கரை பிடிக்கத் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கந்தஹார் விவகாரத்தில் இருந்து அஸ்கர் அசாருக்கு பக்க துணையாக இருந்து வருகிறார். செய்வதை நேர்த்தியாக செய்யும் அஸ்கர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு மிகவும் நெருக்கமானவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை கொல்ல நடந்த சதியில் அஸ்கருக்கும் பங்கு உண்டு.
அந்த சதித் திட்டம் தோல்வி அடைந்ததால் அஸ்கருக்கும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐக்கும் இடையேயான நெருக்கம் குறைந்தது. பின்னர் ஜெனரல் அஸ்பாக் கயானி தான் அஸ்கரை பாகிஸ்தான் ராணுவத்திற்கு மீண்டும் நெருக்கமானவர் ஆக்கினார்.
மவுலானா மசூத் அசார், ரவுப் அஸ்கர், மவுலானா அஸ்பாக் அகமது, ஹபீஸ் அப்துல் ஷகுர் மற்றும் காசிம் ஜான் ஆகியோர் பதன்கோட் தாக்குதலுக்கு திட்டமிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.
அஸ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை வலுவிழக்கச் செய்யும் என்று இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசார் கைது செய்யப்பட்டு ஜம்மு சிறையில் ஆறு ஆண்டுகள் இருந்தபோது கந்தஹார் விமான கடத்தலுக்கு திட்டமிட்டதே அஸ்கர் தான். அசாரை விடுவிக்க அவர் அவ்வாறு செய்தார்.
அசார் விடுவிக்கப்பட்ட பிறகு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தை தாக்கியது. தீவிரவாதிகள் மத்தியில் அஸ்கருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.