புலிகள் பாதுகாப்பு நிதியில் ரூ.1.1 கோடி முன்னாள் ஜனாதிபதி வருகைக்கு செலவு.. ஆர்டிஐ மூலம் அம்பலம்!
கவுகாத்தி : அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவுக்கு, கடந்தாண்டு குடியரசுத் தலைவ்ராக இருந்தபோது ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தபோது, புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து, 1.1 கோடி ரூபாய் நிதியை செலவு செய்யப்பட்டதாக, ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சென்றார். அவருடைய இந்த பயணத்தின் போது, ஏற்பட்ட செலவுகளுக்கு காசிரங்கா தேசியப் பூங்காவின் புலிகள் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1.1 கோடியை அசாம் அரசு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அசாமைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ரோஹித் சௌத்ரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம், புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2022 மே மாதம் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவுக்குப் காசிரங்கா தேசிய பூங்கா கள இயக்குநர் பதிலளித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையின் போது, உணவு, கூடாரங்கள், தரை விரிப்புகள் மற்றும் நினைவுச் சின்னங்களைச் செப்பனிடுதல், மாநாட்டு மண்டபத்தை புதுப்பித்தல், ஓவியம் வரைதல், காற்று சுத்திகரிப்பு கருவி வாங்கியது ஆகியவற்றுக்காக அசாமின் காசிரங்கா புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிதியிலிருந்து ரூபாய் 1.1 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20ஆம் தேதி உணவுக்காக, 2.43 லட்சம் ரூபாயும், பிப்ரவரி 26ல் தேனீருக்காக 50 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்டிஐ மனுவுக்கு கிடைத்த பதிலை மேற்கோள் காட்டி, நிதியை திசை திருப்புவது குறித்து அசாம் மாநில தலைமை செயலாளருக்கு ரோஹித் சவுத்ரி கடிதம் எழுதினார். குடியரசுத் தலைவரின் வருகைக்காக புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து செலவழிக்கப்பட்ட 1.1 கோடியைத் தவிர, மேலும் ரூ.51 லட்சம் பொது வனவிலங்கு நிதியிலிருந்து திருப்பி விடப்பட்டது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications