மகர ஜோதி திருவிழா.. சபரிமலையில் நடைதிறக்கும் நேரம் அதிகரிப்பு
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி விழாவினை முன்னிட்டு ஐய்யப்பன் கோவிலில் நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வருகிற 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
அதையொட்டி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து தரிசனம் நடத்தி, ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதி சுற்றுப்புறங்களில் எங்கு பார்த்தாலும் ஐய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கிறார்கள்.
பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் நடை திறப்பு நேரம் காலை, மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கு திறக்கப்படுகிறது. அதுபோல் மதியம் 1 மணிக்கு பதில் 1.30 மணிக்கும், இரவு 10 மணிக்கு பதில் 11.30 மணிக்கும் அடைக்கப்படுகிறது. இதனிடையே 5 மணி நேரம் மட்டுமே கோவில் அடைக்கப்பட்டு இருக்கும்.
இதன் காரணமாக கோவில் தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூசாரிகள் குறைந்த அளவே ஓய்வு எடுத்து விட்டு நடையை திறந்து பூஜை, வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.