சச்சின், டோணி, ஷாருக்கான், சல்மான் கானின் ஐடி கணக்கை ஹேக் செய்த சி.ஏ. மாணவர்
மும்பை: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், டோணி ஆகியோரின் வருமான வரிக் கணக்கை சிஏ மாணவர் ஒருவர் ஹேக் செய்துள்ளார்.
தொழில் அதிபர் அனில் அம்பானியின் வருமான வரிக் கணக்கை ஹைதராபாத்தை சேர்ந்த சிஏ மாணவி ஒருவர் ஹேக் செய்தார். மனோஜ் தாகா அன்ட் கம்பெனியில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்த அந்த மாணவி அனில் அம்பானியின் வருமான வரிக் கணக்கை ஹேக் செய்தார்.
இது குறித்து மும்பை போலீசார் அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்த 2 வாரத்திற்குள் பிரபலங்கள் 4 பேரின் வருமான வரிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கான், சல்மான் கான்
நொய்டாவைச் சேர்ந்த சஞ்சித்(22) என்னும் சி.ஏ. மாணவர் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரின் வருமான வரிக் கணக்கை கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி ஹேக் செய்துள்ளார்.
சச்சின், டோணி
விஷால் கௌஷால் கம்பெனியில் இன்டர்ன்ஷிப் செய்து வரும் சஞ்சித் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் டோணி ஆகியோரின் வருமான வரிக் கணக்குகளையும் ஹேக் செய்துள்ளார். டோணியின் கணக்கை ஜூன் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், சச்சினின் கணக்கை ஜூலை 4ம் தேதியும் ஹேக் செய்துள்ளார்.
அனில் அம்பானி
சஞ்சித் கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தொழில் அதிபர் அனில் அம்பானியின் வருமான வரிக் கணக்கையும் ஹேக் செய்துள்ளார்.
ஆர்வக்கோளாறு
சஞ்சித் மீது சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் சஞ்சித்தை கைது செய்யவில்லை. அவர் ஹைதராபாத் பெண் போன்று வருமான வரி விவரங்களை டவுன்லோட் செய்யவில்லை மாறாக அதில் உள்ள விவரங்களை பார்த்துள்ளார். அவர்களின் வருமான வரிக் கணக்கில் என்ன தான் உள்ளது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹேக் செய்ததாக சஞ்சித் தெரிவித்தார்.
இது தான் பாதுகாப்பா?
பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து வருமான வரித் துறைக்கு குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.