ஜெயலலிதா மரணம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.

இருப்பினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனை, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை சார்பாக, முறையான விளக்கம் அளிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications