காவிரி நீரை திறக்காமல் சட்டசபையை கர்நாடகா கூட்டியது கூட்டாட்சிக்கு எதிரானது: சுப்ரீம்கோர்ட் சுளீர்!
டெல்லி: தாம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் அதை எதிர்த்து கர்நாடகா அரசு சட்டசபையை கூட்டியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்து கர்நாடகா, சட்டசபையை கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

கர்நாடகாவின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது, கர்நாடகா அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது என்பது நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; கூட்டாட்சி தத்துவத்தின் படி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சனை எழும்போது மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
அத்துடன் மாநிலங்கள் எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை அணுகக் கூடாது; மாநிலங்கள் தங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் போது பேசித்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத்தை நாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications