அவமானங்களை சந்தித்தபோதும் அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேற நினைத்ததில்லை: ராஜ்நாத்சிங்
டெல்லி: பல்வேறு இன்னல்களையும், அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அரசியல் சாசன சிறப்பு அமர்வில் பேசிய ராஜ்நாத் சிங், கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் அமர்வில் லோக்சபாவில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையடுத்து. அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் நினைவாகவும், சட்டமேதை அம்பேத்கரை
கவுரவிக்கும் வகையிலும் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அரசியலமைப்பு சட்டம் குறித்தும், அம்பேத்கரை நினைவு கூர்ந்தும் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பி.ஆர்.அம்பேத்கர் பல்வேறு அவமானங்களையும், தடைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய தேசத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடுநிலையான பார்வையை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தன்னை பிறர் புறக்கணிப்பதாகவும், இழிவுபடுத்தியதாகவும் உணரவில்லை. இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப்பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என உறுதிபட தெரிவித்தார் என்று தெரிவித்தார்.
இதேபோல், மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் அரசியலமைப்பு சட்டம் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி நாளை அரசமைப்புச் சட்டம் குறித்து பேசுகிறார்.
மாநிலங்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை தாக்குதல் நினைவு
நாளையொட்டி, இரண்டு நிமிடம் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications