"தலையணை உடன் உடலுறவு! சக மாணவிகள் பற்றி.." மத்திய பிரதேசத்தை அதிர வைத்த ராகிங் கொடூரம்! பகீர் தகவல்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு நடந்துள்ள ராகிங் கொடுமை அதிர வைப்பதாக உள்ளது
கல்லூரிகளுக்குப் புதிதாக வரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க தமிழ்நாட்டில் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன.
இருப்பினும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர்.

மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரியான இந்தூர் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் மோசமாக ராகிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஜூனியர் மாணவர்களை மோசமான மற்றும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் குறித்த தகல்கள் வெளியிடப்படவில்லை.

புகார்
சீனியர் மாணவர்களின் இந்தச் செயலை ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியாத ஜூனியர்கள், இது தொடர்பாக யுஜிசிக்கு புகார் அளித்தனர். மேலும், போலீசாரிடமும் இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது சீனியர்கள் தங்களை என்னவெல்லாம் செய்யச் சொன்னார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து உள்ளனர்.

தலையணை உடன் உடலுறவு
சில சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை தலையணை மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது போல நடிக்க வைத்துள்ளனர். இது தொடர்பான புகாரைப் பெற்ற உடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கல்லூரியை யுஜிசி வலியுறுத்தியது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து ஜூனியர் மாணவர்களின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.

சக மாணவிகள்
அப்போது மேலும், சில அதிர்ச்சி தகவல்களும் தெரிய வந்துள்ளது. அதாவது உடன் படிக்கும் சக மாணவி குறித்து ஆபாசமான கருத்துகளைக் கூறும்படியும் வற்புறுத்தி உள்ளனர். பேராசிரியர்களும் கூட ராகிங்கை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். மாறாக ராக்கிங்கை ஆதரிக்கும் வகையிலேயே அவர் செயல்பட்டதாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஸ்மார்ட் போன்
சீனியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பிடித்துக் கொண்டதாகவும் தோப்புக்கரணம் போடச் சொல்லி வறுப்புறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், ஜூனியர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக அறைந்து கொள்ளவும் வைத்துள்ளனர். புகார் தெரிவித்தால், வரும் காலத்தில் சீனியர்கள் தங்களைப் பழிவாங்கலாம் என்பதால் ஜூனியர் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

விசாரணை
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக அனைவரிடமும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரி தெஹ்சீப் காசி தெரிவித்தார். ராகிங் தொடர்பான வாட்ஸ்அப் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications