ஷீனா கொலை பற்றி போலீசாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தது 'அவரா'?
மும்பை: ஷீனா போரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மும்பை போலீசாருக்கு அவருடைய பள்ளி காலத்து தோழி தகவல் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்து அவரின் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில் அண்மையில் யாரோ மும்பை போலீசாருக்கு போன் செய்து ஷீனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் அளித்தனர். அதன் பிறகே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு இந்திராணியை பிடித்தனர்.
இந்நிலையில் போலீசாருக்கு யார் போன் செய்து தகவல் அளித்தது என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த சூழலில் புதிய தகவல் கிடைத்துள்ளது.
ஷீனா
ஷீனா கவுஹாத்தியில் உள்ள டிஸ்னிலேண்ட் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போதில் இருந்து அவருக்கு ஒரு பெண் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.
மும்பை
ஷீனா மும்பை வந்த பிறகும் அந்த தோழியுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ஷீனா கவுஹாத்தியில் நடந்த அந்த தோழியின் திருமணத்திற்கு சென்றுள்ளார். அந்த தோழி அரசு அதிகாரியான தனது கணவருடன் கடந்த பிப்ரவரி மாதம் மும்பைக்கு வந்து ஷீனாவை பார்த்துள்ளார்.
மாயம்
எப்பொழுதும் தொடர்பில் இருந்த ஷீனா திடீர் என்று தன்னை தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் அந்த தோழி தனது கணவரிடம் இது குறித்து தெரிவிக்க அவர் தான் மீரட்டில் இருந்து மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சித்தார்த் தாஸ்
இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த் தாஸ் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பார் என்று முதலில் கருதப்பட்டது. ஷீனாவை இந்திராணி கொலை செய்திருந்தால் அவரை தூக்கிலிட வேண்டும் என்று தாஸ் தெரிவித்துள்ளார்.