சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த சிவசேனா: பாஜகவுடன் பேச்சுவார்த்தைக்கும் தயார்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் சிவசேனா எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஆனால் அரசில் பங்குபெறுவது பற்றி பாஜக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் பேச தயார் என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் மைனாரிட்டி பாஜ அரசு தனது பெரும்பான்மையை நாளைக்குள் நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் சிவசேனாவுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் உள்ளது. பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உதவியை ஏற்றால் நாங்கள் நிச்சயம் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்து அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸோ முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு அதன் பிறகே பதவிகள் அளிக்கப்படும் என்று சிவசேனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த பரபரப்பான சூழலில் புதிய அரசு பதவியேற்ற பிறகு மகாராஷ்டிரா சட்டசபை நேற்று முதல் முறையாக கூடியது. சட்டசபைக்கு வந்த சிவசேனா உறுப்பினர்கள் நேராக எதிர்கட்சி வரிசைக்கு சென்று அங்கு அமர்ந்தனர்.
இந்நிலையில் இது குறித்து உத்தவ் கூறுகையில்,
எதிர்கட்சி தலைவர் பதவியை அளிக்குமாறு சட்டசபை செயலாளருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு இந்த பதவி கிடைப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் எங்கள் பொறுமையை பலவீனமாக நினைக்காதீர்கள். எங்கள் பலத்தை குறைத்து எடைபோட ஒருபோதும் விடமாட்டோம்.
பேச்சுவார்த்தை நடப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் பாஜக எப்பொழுது முன்வருகிறதோ அப்பொழுது அதனுடன் அரசில் பங்கேற்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.












Click it and Unblock the Notifications