ஹெலிகாப்டரில் திடீர் தீ: கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருஷ்டவசமாக தப்பினார்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகும் முன்பு, விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, இன்று காலை ஹெலிகாப்டரில் மைசூர் புறப்படுவதாக இருந்தது.

இதே ஹெலிகாப்டரில் முதல்வருடன், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும் மைசூர் செல்வதாக இருந்தது. எனவே ஹெலிபேட் சென்ற முதல்வரும், அமைச்சரும், ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்தனர். ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகுவதற்கு சில வினாடிகளே பாக்கியிருந்த நிலையில், இன்ஜினில் தீ பரவியதை பைலட் கவனித்துள்ளார்.

உடனடியாக, ஹெலிகாப்டர்களுக்குள் இருந்த முதல்வரும், அமைச்சரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். தீ விபத்து சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகும் முன்பு விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சாலை மார்க்கமாக சித்தராமையா மைசூரு புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications