திடீர் உடல்நலக்குறைவு... மோடி தொகுதியில் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் சோனியா !
வாரணாசி: கடும் காய்ச்சல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தொகுதியில் சோனியா கலந்துகொள்ள இருந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீடாசித்(78), களமிறக்கப்பட்டுள்ளார். வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆளும் சமாஜ்வாதி கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. பாஜக இப்போதே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. அதேசமயம் காங்கிரசும் தீவிர பிரசார பயணத்தை திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
பிரசாரத்தின் முதல் கட்டமாக கடந்த மாதம் பேருந்து பிரசார பயணத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் மெகா பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சோனியா பங்கேற்று பிரசாரம் செய்யவும் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சோனியா நேற்று வராணாசி வந்தார்.
இதையடுத்து இன்று காலை வாரணாசியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் சோனியா. பாபட்பூரில் இருந்து கார் மூலம் நகரின் பல பகுதிகளில் மக்களை சந்தித்தார். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் ஊர்வலமாக சென்று தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
சோனியாவின் காருடன் சுமார் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அணிவகுத்து சென்றனர். முதலில் காரில் பயணம் செய்த சோனியா காந்தி, பின்னர் திறந்த வெளி ஜீப்பில் நின்று தொண்டர்களுக்கு கை அசைத்தவாறு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்.
இந்நிலையில் சோனியா காந்தி பங்கேற்ற பேரணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. சோனியா காந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் பேரணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக சோனியா டெல்லி திரும்பினார். இதனால் வாரணாசி பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தனது டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், " வாரணாசி தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அறிந்தேன். அவரது உடல் நலம் விரைவாக தேறவும் நல்ல ஆரோக்கியம் பெறவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications