கர்நாடக தேர்தல் வெற்றி மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும்... சோனியாகாந்தி!
காங்கிரஸ் கட்சியினர் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியினர் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும் என்றும் சோனியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது : இக்கட்டான காலகட்டத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் இதற்காக முதலில் ராகுல்காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் என்பது ஒரு மாபெரும் இயக்கம், காங்கிரஸ் கட்சியின் வெற்றி தேசத்தின் வெற்றி, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.
40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திராகாந்தி சிக்மங்களூர் தொகுதியில் ஏற்படுத்திய மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தகைய திருப்புமுனை வெற்றி தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது என்பதை கருதியே நான் அரசியலுக்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
கட்சிக்காக கடினமாக உழைத்தவர்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு இருட்டடிப்பு செய்து வருவது வருத்தமளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அராஜக அரசு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் செய்துவிடவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் செயல்படும் விதம் நம்மை மாற்று அரசியல் பாதைக்கு அழைத்து செல்லும். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.