வங்கிகளில் மை வைக்க தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு! தடை விதிக்க வலியுறுத்தல்!!
பணம் மாற்றப் போகும் பொதுமக்கள் கை விரலில் மை வைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லி: செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றப் போகும் பொதுமக்கள் கையில் மை வைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது. தேர்தல் நேரத்தில் இதனைச் செய்தால் வாக்களிக்கும் போது குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி, இதனை உடனடியாக நிறுத்த இந்திய தேர்தல் ஆணையம் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பழைய நோட்டை மாற்றும் பொது மக்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு, மக்கள் பணத்தை மாற்றிக் கொண்டிருந்தனர். பின்னர், ஒருவரே திரும்ப திரும்ப பணத்தை மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, வங்கியில் பணத்தை மாற்றும் பொதுமக்களின் கை விரலில் ஓட்டு போடும் போது வைக்கப்படும் அழியாத மையை வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக பழைய நோட்டுக்களை மாற்றும் பொதுமக்களின் கை விரல்களில் மை வைக்கப்பட்டு வருகிறது. என்றாலும் மையை வலது கை விரலில் வைக்க வேண்டுமா அல்லது இடது கை விரலில் வைக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் வங்கிகள் உள்ளன. ஏற்கனவே, வலது கை விரலில் மை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த போதிலும் வலது அல்லது இடது என்று மாற்றி மாற்றிதான் வங்கிகளில் மை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுவதால், வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் பணத்தை மாற்றப் போகும் பொதுமக்களின் கை விரலில் அழியாத மையை வங்கியில் வைக்க வேண்டாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நிதி அமைச்சகத்திடம் இருந்து இதுகுறித்து இன்னும் பதில் எதுவும் கிடைக்க வில்லை. என்றாலும் நாளை தேர்தல் என்பதால் இன்று அமைச்சகம் பதில் தரும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications