உயிரோடு புதைக்கப்பட்ட இளைஞர்.. காப்பாற்றிய தெருநாய்கள்.. நடந்தது என்ன?
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் நிலத்தகராறில் 4 பேரால் தாக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞரை தெருநாய்கள் இணைந்து மண்ணைத் தோண்டி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அந்த இளைஞர் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் ரூப் கிஷோர் (24). இவர் தனது வீட்டில் இருந்தபோது கட்டாயப்படுத்தி 4 பேர் அழைத்து கடந்த ஜூலை 18ம் தேதி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆக்ரோவின் அடோர்னி பகுதியில் ரூப் கிஷோருக்கும், அங்கித், கெளரவ், கரண், ஆகாஷ் ஆகிய 4 பேருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த 4 பேரும் ரூப் கிஷோரை தாக்கி தங்களது பண்ணையில் உயிருடன் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், ரூப் கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தில் தெருநாய்கள் கூட்டம் சேர்ந்து மண்ணைத் தோண்டியுள்ளன. ரூப் கிஷோரின் சதைகளை நாய்கள் கடித்தபோது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. இதையடுத்து, அந்தக் குழியில் இருந்து எழுந்த அவர், அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரூப்கிஷோர் அளித்த புகாரின்பேரில் ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தகராறில் இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாய்களின் மனிதநேயமிக்க இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications