பெங்களூர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.வி.சேகர் பிரச்சாரம்!
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் தமிழர்களை குறிவைத்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் குதித்துள்ளன. பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அனந்தகுமாருக்கு ஆதரவாக நாடக எஸ்.வி.சேகர் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூர் நகரில் அதிக அளவு தமிழர்கள் வசிக்கிறார்கள். தொழில் நிமித்தமாக வந்து பல வருடங்களாக வசிப்பவர்கள் தவிர சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைபார்க்க வந்து தங்கியுள்ள இளைஞர்களும் அதிகம். எனவே எந்த ஒரு கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவர்கள் வெற்றிக்கு தமிழர்கள் தயவு தேவை.

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களின்போது மட்டுமின்றி மாநகராட்சி தேர்தலிலும் தமிழர்களை சுற்றிவர ஆரம்பித்துவிடுகின்றன கர்நாடக அரசியல் கட்சிகள். காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய மூன்றும் கர்நாடகாவின் பிரதான கட்சிகள்.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மியும் களமிளங்கியுள்ளது. கட்சிபாகுபாடு இல்லாமல் அனைவரும் தமிழர்கள் வாக்குகளை பெற முயற்சிகளை செய்துவருகிறார்கள்.
இதில் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் ஒருபடி மேலேபோய் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ரூத் மனோரமா என்ற சமூக சேவகிக்கு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட டிக்கெட் கொடுத்துள்ளது.
இந்த தொகுதியில்தான் ஆதார் ஆணைய முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி காங்கிரஸ் சார்பிலும், அனந்தகுமார் பாஜக சார்பிலும் போட்டியிலுள்ளனர். தமிழர்கள் வாக்குகளை கவருவதற்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு தினமும் ஏதாவது ஒரு கட்சியின் வேட்பாளர் சென்று மாலை அணிவித்து பத்திரிகை புகைப்படத்துக்காக போஸ் கொடுத்து வருகிறார்கள்.
தங்கள் கட்சிகளிலுள்ள தமிழ் கவுன்சிலர்களிடம், அந்தந்த வார்டுகளில் தமிழர் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள கட்டளைபோட்டுள்ளனர். காவிரிப் பிரச்சனை காரணமாக, கர்நாடகாவில் தன்னை தமிழர் என்று வெளிக்காட்டிக் கொள்ளவே பொதுவாழ்வில் இருப்போர் பயப்பட்ட காலம் இருந்ததது.
ஆனால் இப்போது மஜத வேட்பாளர் ரூத்மனோரமா தன்னை தமிழச்சி என்றும் அதற்காக தனக்கு வாக்களிக்குமாறும் பத்திரிகையில் தினமும் விளம்பரம் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே நீலகேனியின் போட்டியால் ஆடிப்போயுள்ள அனந்தகுமார், தமிழர் வாக்குகளை
இழக்க விரும்பவில்லை.
தமிழ் வாக்குகளை பெற என்ன செய்ய என்ற கவலையில் ஆழ்ந்திருந்த அனந்தகுமாருக்கு அபயம் அளிக்க நடிகர் எஸ்.வி.சேகர் வந்தார். பெங்களூரில் அவ்வப்போது மேடை நாடகங்கள் நடத்துவதால் இங்குள்ள மக்களுக்கு எஸ்.வி.சேகர் ஓரளவுக்கு பரிட்சையமானவர் என்பதால் அவரை தனக்காக பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தார் அனந்தகுமார்.
தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 15 இடங்களில் எஸ்.வி.சேகர் இன்று பிரச்சாரம் செய்தார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செவ்வாய்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.
பரபரப்பான கிரிக்கெட் பந்தயத்தில் கடைசி கட்டமாக களமிறங்கும் பேட்ஸ்மேன் போல எஸ்.வி.சேகரை கர்நாடக பிரசார களத்தில் இறக்கிய பாஜவின் கணக்கு பலிக்குமா என்பது மே 16ல் தெரியும்.












Click it and Unblock the Notifications