காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக திகழ்ந்த.. சையது அலி ஷா கிலானி காலமானார்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார்.
Recommended Video
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும். அதேபோல சில பிரிவினைவாத இயக்கங்களும் காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன.

அப்படி காஷ்மீர் பிரிவினையைக் கோரி தீவிரமாகச் செயல்பட்டு வந்த இயக்கங்களில் முக்கியமானது ஹூரியத் மாநாட்டுக் கட்சி. இந்த கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. சுமார் 27 ஆண்டுகளாக இக்கட்சியில் செயல்பட்டு வந்த சையது அலி ஷா கிலானி, கடந்த ஆண்டு தான் இக்கட்சியிலிருந்து விலக்கியிருந்தார்.
இந்நிலையில், 92 வயதான காஷ்மீரின் மூத்த பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை இரவு காலமானார். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2018இல் சையது அலி ஷா கிலானிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார். அதன் பின்னர் அவரது உடல்நிலை நலமாக இல்லை எனக் கூறப்படுகிறது.
சையது அலி ஷா கிலானியின் மறைவுக்கு காஷ்மீர் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி தனது ட்விட்டரில், " கிலானியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பல விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது உறுதி மற்றும் தன்னம்பிக்கைக்காக நான் அவரை மதிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்குக் கடவுள் ஆறுதல் வழங்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
சையது அலி ஷா கிலானி 1972, 1977, 1987 ஆகிய ஆண்டுகளில் காஷ்மீர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications