அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா போட்டோ.. கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் பிரசாந்த் பூஷன்
டெல்லி: அரசு விளம்பரங்கள் வெளியிடுவதில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டி, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களின் அரசுகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'பொது நல வழக்கு மையம்' (CPIL) என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விபரம்: தமிழக அரசு, கடந்த, மே 26, 30, ஜூன் 2, 4 ஆகிய தேதிகளில், நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை பட்டியலிட்டு, முதல்வர் ஜெயலலிதா படத்துடன் இரு பக்க விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. முதல்வரை, 'புரட்சிகர தலைவர்' என்று குறிப்பிட்டு, அரசை புகழ்ந்து, விளம்பரம் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசும், விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. இதற்காக ரூ.526 கோடியை செலவிட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக, மிக பல மடங்கு அதிக நிதியை, இதற்காக அந்த அரசு செலவழிக்கிறது.
கடந்த மே 13ம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மாநில அரசுகள் பத்திரிகைகள் வாயிலாக தரும் விளம்பரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டன. முதல்வரின் படத்தை போட்டு பிரச்சாரம் செய்ய கூடாது என்று அதில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி, முதல்வரின் படத்தை போட்டு, விளம்பரம் செய்த டெல்லி மற்றும் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications