12 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்று தற்கொலை செய்த விவசாயி
அடிலாபாத்: மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று, மனைவியையும் வெட்டி காயப்படுத்திய விவசாயி தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அடிலாபாத் மாவட்டத்தின் பைன்ஸா மண்டலம் அருகே இருக்கும் குண்டேகான் கிராமத்தை சேர்ந்த விவசாயியான தாதா ராவ் (40) இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிபோதையில் தனது 12 வயது மகனான மாருதியை துடிதுடிக்க கோடரியால் வெட்டிக் கொன்றார்.
இதிலும், வெறி அடங்காத அவர் தனது மனைவி கவிதாவையும் கோடரியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் மனைவியும் மகனும் இறந்து விட்டதாக கருதிய தாதா ராவ், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து, சில நிமிடங்களுக்குள் பலியானார். இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுக்க காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பைன்ஸா புறநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் விவசாயி ஒருவர் தனது மகனை வெட்டிக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அடிலாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.