குஜராத்: ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான மகாசிவராத்திரி- வீடியோ காட்சி!!
ஜூனாகாத்: குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான ஆட்டம் பாட்டம் ஊர்வலத்துடன் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.
குஜராத் மாநிலம் ஜூனாகாத்தின் கிர்னார் மலைப் பகுதியை சிவனின் முகமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 10 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து வழிபாடு நடத்துவது இங்கு வழக்கம். இதே கிர்னார் மலையை ஜைன மதத்தினரும் புனிதத் தலமாக வழிபடுகின்றனர்.

இம்மலை அடிவாரத்தில் இந்து மதத்தின் 'தற்கொலைப்படை'யாக செயல்பட்டு வரும் அகோரிகள் எனப்படும் நிர்வாண சாதுக்களின் கிளை மடங்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக கும்பமேளா காலங்களில்தான் பல்லாயிரக்கணக்கில் நிர்வாண சாதுக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி ஹரித்துவார், அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் நீராடி வழிபாடு நடத்துவர்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கிர்னார் மலை அடிவாரத்தில் உள்ள பாவ்நாத் கோயிலில் இந்த நிர்வாண சாதுக்கள் ஒன்று கூடி நீராடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்கள் நீராடுவது மிகச் சிறிய அளவிலான கிணறு போன்ற இடத்தில்தான்.. இந்த கிணற்றில் நிர்வாண சாதுக்களின் எந்தப் பிரிவு முதலில் குளிக்கிறதோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
இதற்காக நிர்வாண சாதுக்களிடையே பெரும் போட்டி அடிதடியும் நடைபெறும். இந்த ஆண்டும் பாவ்நாத் சிவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி நாடு முழுவதும் இருந்து சாம்பல் பூசிய உடம்புடன் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் ஜூனாகாத் கிர்னார் மலைஅடிவாரத்தில் முகாமிட்டிருந்தனர். மலைஅடிவாரத்தில் கொட்டும் பனியிலும் இவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே விடிய விடிய வலம் வந்து கொண்டிருந்தனர். இவர்களை இறைவனின் வடிவமாக கருதி பக்தர்களும் ஆசி பெற்று வந்தனர்.
மகாசிவராத்திரியின் கடைசிநாளான நேற்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. முன்னதாக நிர்வாண சாமியார்களின் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.
நிர்வாணாமாகவே ஆடிப் பாடி பலவகை சாகசங்களை நிகழ்த்தியபடி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். மிரள வைக்கும் சிலம்பாட்டம், கத்திச் சண்டை உள்ளிட்ட இந்த நிர்வாண சாகச நிகழ்ச்சிகள் பல மணிநேரம் நடைபெற்றது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்த 'நிர்வாண' சாதுக்களின் சாகசங்களை பார்வையிட்டனர். பின்னர் பாவ்நாத் கோயிலின் புனித கிணற்றில் போட்டி போட்டுக் கொண்டு நிர்வாண சாதுக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
இந்தத் திருவிழாவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications