45வது பிறந்தநாளுக்கு 4 கிலோ எடையுள்ள தங்க சட்டை வாங்கிய தொழில் அதிபர்: விலை ரூ.1.30 கோடி மட்டுமே
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழில் அதிபர் 4 கிலோ எடை கொண்ட ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 260 கிமீ தொலைவில் உள்ள இயோலா நகரைச் சேர்ந்தவர் பங்கஜ் பாரக். கார்மென்ட் தொழில் அதிபர். அவர் 4 கிலோ எடை கொண்ட ரூ. 1.30 மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார். நாசிக்கில் உள்ள பஃப்னா ஜுவல்லர்ஸ் வடிவமைத்த அந்த தங்க சட்டையை அணிந்து அவர் சித்திவிநாயக் கோவிலுக்கு சென்றார்.
தகதகவென ஜொலிக்கும் தங்க சட்டையை அணிந்து சென்ற அவர் மீது தான் அனைவரின் கண்களும். வரும் வெள்ளிக்கிழமை தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பங்கஜ். அன்றைய தினம் மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத் துறை அமைசச்ர் சக்கன் புஜ்பல் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டியில் அவர் தங்க சட்டையுடன் தான் கலந்து கொள்கிறார்.
இது குறித்து பங்கஜ் கூறுகையில்,
எனக்கு 5 வயதில் இருந்தே தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். என் 45வது பிறந்தநாளையொட்டி இந்த தங்க சட்டையை வாங்கியுள்ளேன். இந்த சட்டையை தைக்க 18-22 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தங்கத்தால் ஆனபோதிலும் இதை துவைக்கலாம், கிழிந்தால் சரி செய்யலாம். இதற்கு வாழ்நாள் முழுவதும் கியாரண்டி உள்ளது. நான் 8வது வகுப்பு படிக்கையிலேயே பள்ளியை விட்டு நின்று குடும்ப வியாபாரத்தை கவனிக்கத் துவங்கினேன். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணத்தில் நான் மணப்பெண்ணை விட அதிக நகைகள் அணிந்திருந்ததால் பல விருந்தாளிகள் என்னை பார்த்து முகம் சுளித்தனர் என்றார்.