பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு.. ஆக.14ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.