பாஜக கூட்டணியை உறுதியாக ஆதரிக்கமாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மத்தியில் பாரதிய ஜனதாவே ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன. இதனால் அந்த அணிக்கு தாவக் கூடிய கட்சிகள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதில் தேசிய அளவில் அதிக இடங்களைப் பெறக் கூடிய கட்சிகளில் ஒன்றான மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்ன மாதிரியான நிலையை எடுக்கப் போகிறது என்பதும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது.

அன்று இயற்கை கூட்டணி
அப்போது காங்கிரஸை மிகக் கடுமையாக மமதா பானர்ஜி எதிர்த்து வந்தார். அதனால் 'பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸும் இயற்கையான கூட்டணிகள்" என்று மமதா வர்ணித்திருந்தார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்திருக்கிறார் மமதா.

மமதாவுடன் நெருக்கம் காட்டும் காங்.
மோதல் போக்கு இருந்தாலும் மமதாவுக்கு புகழாரம் சூட்ட காங்கிரஸ் தவறுவதும் இல்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கூட மமதாவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியிருந்தார்.

மோடி- மமதா இடையே யுத்தம்
அதே நேரத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கழுதை, காகிதப் புலி, அனுமார் என்றெல்லாம் கடுமையாக தாக்கியிருந்தார் மமதா பானர்ஜி. மேலும் மேற்கு வங்கத்தில் குடியேறிய சட்டவிரோத வங்கதேசத்தவரை வெளியேற்றுவோம் என்று மோடி கூறினார். நான் நினைத்தால் உங்களால் மேற்கு வங்க மண்ணை மிதிக்கக் கூட விடமாட்டேன். இடுப்பில் கயிற்றை கட்டி ஜெயிலில் போடுவேன் என்றும் மமதா மிரட்டினார்.

பாஜகவுக்கு ஆதரவா?
மோடியும் ஜெயிலில் போட்டால் நான் வங்க மொழி கற்பேன் என்று பதிலடி கொடுத்திருந்தார். இத்தனை களேபர சம்பவங்களுக்குப் பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் பாஜக கூட்டணிக்கு போகுமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

மோடிக்கு ஆதரவு இல்லை
இதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைய்ன் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பீர்களா என கேட்கிறீர்கள்? எங்கள் பதில் இல்லை.

ஆட்சி அமைக்கவும் ஆதரவு இல்லை
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு 20-25 இடங்கள் குறைவாக இருந்தால் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்குமா என்றும் கேட்கிறீர்கள்.. நான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை நேர்மையுடன் நடத்தியிருக்கிறோம். இதற்கும் பதில் இல்லை என்பதுதான் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications