தலையில் அடித்துக் கதறிய அமைச்சர்கள்... 4 பேர் மட்டுமே ஜெ.வைச் சந்தித்தனர் - மற்றவர்கள் ஏமாற்றம்
பெங்களூர்: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவைச் சந்திக்க அனைத்து அமைச்சர்களும் முயன்ற நிலையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. மற்றவர்களால் பார்க்க முடியாமல் போய் விட்டது. இதனால் சோகமான மனநிலையில் பெங்களூரில் இருந்து சென்னைக் கிளம்பியுள்ளனர் தமிழக அமைச்சர்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டதையொட்டி, முன்னதாகவே பெங்களூரில் முகாமிட்டிருந்தனர் தமிழக அமைச்சர்கள். இந்நிலையில், ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பைக் கேட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்த அமைச்சர்கள் தலையில் அடித்து கதறி அழுதனர்.

பின்னர், ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் பெங்களூர் போலீசார் உடனடியாக தங்களது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சிறையில் அடைக்கப் பட்ட ஜெயலலிதாவை எப்படியும் சந்தித்தே தீருவது என்ற உறுதியுடன் சிறை வளாகப் பகுதிக்கு அருகிலேயே காத்திருந்தனர் தமிழக அமைச்சர்கள். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே நேற்று மாலை ஜெயலலிதாவை சந்திக்க முடிந்தது.
இதையடுத்து நேற்றிரவு அமைச்சர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவைக் கழித்தனர்.
இன்று காலை மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அனைத்து அமைச்சர்களும் முயன்றனர். ஆனால் சிறப்பு அனுமதி பெற்று ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் என நான்கு அமைச்சர்களால் மட்டுமே ஜெயலலிதாவைச் சந்திக்க முடிந்தது. மற்றவர்களால் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச இயலவில்லை.
இதையடுத்து 8 கார்கள் மூலம் அமைச்சர்கள் சென்னை நோக்கி புறப்பட்டனர். முன்னதாக சிறை வளாகத்தில் காத்திருந்த போது, அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் பேச முயற்சித்தனர். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் மவுனம் சாதித்தனர்.












Click it and Unblock the Notifications