கோவை மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்த கேரளத்து ரஜிஷ் கைது
திருவனந்தபுரம்: கோவையில் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த ரஜிஷ் என்பவர் கேரளப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி மற்றும் அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைது செய்ய போலீசார் ரகசிய நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். போலீஸ் வேட்டையில் ரஜிஷ் என்ற மாவோயிஸ்டு கேரள போலீசார் பிடியில் சிக்கியுள்ளார். வடகரை போலீஸ் டி.எஸ்.பி.பிரதீப்குமார் தலைமையிலான போலீசார் ரஜிசை கைது செய்தனர்.
கோழிக்கோடு அருகே திக்கோடி பகுதியை சேர்ந்த ரஜிஷ் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுக்கு பலவகைகளில் உதவி உள்ளார். துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களை அவர் சப்ளை செய்து உள்ளார். இதற்காக அவர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மலப்புழா என்ற இடத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஒரு உணவு விடுதி மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது ரஜிசும் அவர்களுடன் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஜிஷ் மீது தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்தது, அடைக்கலம் கொடுத்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை இன்று கோழிக்கோடு கோர்ட்டில் போலீசார் ஆஜர் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் புனேயில் 40 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு பிடிபட்ட மாவோயிஸ்டு தீவிரவாதிகள் முரளி கண்ணம்பள்ளி, அவரது கூட்டாளி இஸ்மாயில் ஆகியோரை புனே போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இவர்கள் மீது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு தாக்குதல் வழக்குகள் உள்ளதால் அவர்களிடம் விசாரிக்க ஆந்திரா, கர்நாடக மாநில போலீசாரும் திட்டமிட்டு உள்ளனர்.
முரளி கண்ணம்பள்ளி பல்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து சதி செயல்களில் ஈடுபட்டதால் அவரிடம் விசாரணை நடத்தி உண்மையை வரவழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.