பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ்தான் - மமதா பானர்ஜி
கொல்கத்தா: பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல், திப்பு சுல்தான் மசூதி இமாம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு வெற்றி தேடி தருவதன் மூலம் மாநிலத்தை நாம் வலுப்படுத்த முடியும். காங்கிரஸ், பாஜக, சிபிஎம் அனைத்துமே மோசமானவை.
நமது போராட்டமே இவர்களை எதிர்த்துதான். .நாம் போராடுவதும் மக்களுக்காகவே. டெல்லியில் உள்ள மத்திய அரசு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும்.
எனக்கு அதிகார நாற்காலியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை இல்லை. மக்களுக்கு எது நல்லதோ அதை செய்யவே விரும்புகிறேன். இம்முறை திரிணாமுல் காங்கிரஸ் இதர மாநிலங்களிலும் போட்டியிடும்.
மேற்கு வங்கத்தை தவிர பிற மாநிலங்களிலும் பிரசாரம் செய்வேன். இதற்காக கூட்டாட்சிக்கான கூட்டணி உருவாக்கப்படும்.
பாஜகவும் காங்கிரஸும் மட்டுமே மாற்று அல்ல. இந்த கட்சிகளுக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ் மட்டும்தான்.. காங்கிரஸ், பாஜக, சிபிஎம் ஆகியவை நமக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரிக்கிறது. நாம் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானவர்கள்.. நமது இப்போதைய முழக்கம் "டெல்லி சலோ" என்பதுதான்..
லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.. அவர்கள் இந்த நாட்டை சூறையாடிவிட்டனர்.
இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.