அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'
குவாஹாத்தி: நாட்டிலேயே திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார் தான் மிகவும் ஏழ்மையான முதல்வர் ஆவார். ஏழை முதல்வர் என்று தன்னை பிறர் கூறுவதில் அவர் பெருமை கொள்கிறார்.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மானிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் ஆனார்.
முன்னதாக அவர் கடந்த ஜனவரி மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விவரங்களையும் தெரிவித்திருந்தார். அவரது சொத்து மதிப்பை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.1,080
வேட்புமனு தாக்கல் செய்தபோது சர்க்காரின் கையில் வெறும் ரூ.1,080 ரொக்கம் மட்டுமே இருந்தது. அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்தது.

தாய் வீடு
சர்க்காரின் அம்மா அஞ்சலி சர்க்காருக்கு சொந்தமான டின் ஷெட் வடிவில் உள்ள 432 சதுர அடி வீடு அவருக்கு கிடைத்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சத்து 20,000 ஆகும்.

மனைவி
மானிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாசார்யா மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெறும்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைத்து வைப்புத் தொகையில் ரூ.23 லட்சத்து 58 ஆயிரத்து 380 வைத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.72,000 மதிப்புள்ள 20 கிராம் தங்கம் உள்ளது.

அசையும் சொத்து
மானிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவியிடம் அசையும் சொத்துக்களே இல்லை. அவர்களின் அசையா சொத்து மற்றும் பண இருப்பு மொத்தம் ரூ. 24 லட்சத்து 52 ஆயிரத்து 395 ஆகும்.

சம்பளம்
வேட்புமனு தாக்கல் செய்தபோது மானிக்கின் மாத சம்பளம் ரூ.9,200. அதையும் அவர் அப்படியே கட்சியிடம் அளித்துவிடுவார். கட்சி அவருக்கு மாதாமாதம் ரூ.5,000 செலவுக்கு அளிக்கும்.

சந்தோஷம்
என்னுடைய பொருளாதார நிலை குறித்த செய்திகளை ரசித்து படிக்கிறேன். என்னை ஏழை முதல்வர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். நான் எளிமையாக இருக்க கட்சி தான் காரணம் என்று அடக்கமாக தெரிவித்தார் மானிக் சர்க்கார்.












Click it and Unblock the Notifications