தினகரனின் ஹவாலா ஏஜென்ட் கைது... டெல்லி ஏர்போர்ட்டில் அலேக்காக தூக்கியது போலீஸ்!
டிடிவி தினகரன் வழக்கில் பணப்பரிமாற்றத்திற்கு உதவியதாக கருதப்படும் ஹவாலா ஏஜென்டை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு உதவிய மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்ட்டை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அழைத்து வரப்பட்டுள்ள தினகரனிடம் லஞ்சம் கொடுத்த பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தினகரனின் வீடு, அலுவலங்களில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையிலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புதிய திருப்பமாக பணப்பரிமாற்றத்திற்கு உதவியதாகக் கருதப்படும் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய புரோக்கர் நரேஷை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். தேர்தல் ஆணையத்துக்கு பேரம் பேசப்பட்ட 50 கோடி ரூபாய் பணத்தில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை புரோக்கர் நரேஷ் தான் சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு எடுத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படுகிறது.
சுகேஷை நரேஷ் எப்படி தொடர்பு கொண்டார், பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்று நரேஷிடம் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.