டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்த டெல்லி போலீஸ்!
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் டிடிவி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரட்டை இலைச்சின்னத்தை பெற 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசிய டிடிவி தினகரன் முதற்கட்டமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கியது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது.
இதையடுத்து இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் கைதுசெய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 4 நாட்கள் நடைபெற்ற பல மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்லிகார்ஜூனா மூலமே சுகேஷ் சந்திரசேகர் டிடிவி தினகரனுக்கு அறிமுகமாககியுள்ளார் என கூறப்படுகிறது. இன்று மாலை நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு மல்லிகார்ஜூனாவும் ஜனார்த்தனனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.