சர்வதேச தொடர்புகள்! உதய்பூர் டெய்லர் கொலையில் பெரும் சதி? என்ஐஏ-ஐ களமிறக்கிய உள் துறை அமைச்சகம்
உதய்பூர்: உதய்பூர் டெய்லர் கொலை சம்பவம் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
சமீபத்தில் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த விவகாரத்திற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. இதையடுத்து அவர் மீது பாஜக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து இருந்தது.

ராஜஸ்தான்
இந்த விவகாரம் ஓய்ந்து இருந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த கன்ஹையா லால் என்பவர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அவரது வீட்டிற்குச் சென்று ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை
இந்தச் சூழலில் கன்ஹையா லால் நேற்றைய தினம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதனிடையே நேற்று கன்ஹையா லாலின் கடைக்கு வந்த இரு இஸ்லாமியர்கள் துணி தைக்கக் கொடுப்பது போல முதலில் பேசியுள்ளனர். பின்னர் திடீரென கன்ஹையா லாலை கொடூரமாகத் தாக்கினர், அதைத் தொடர்ந்து அவரது கழுத்தை வெட்டினர். இதனை வீடியோவாக எடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

கலவரம்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டம் தெரிவித்து உள்ளனர். இதனால் ராஜஸ்தானில் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும், கலவரம் ஏற்படாமல் இருக்க அதிக எண்ணைக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் அரசு தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. உதய்பூர் பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ராஜஸ்தானில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேசியப் பாதுகாப்பு முகமை
குற்றவாளிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட இன்னொரு வீடியோவில், பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். இதனால் இந்தக் கொலை சம்பவம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தைப் பயங்கரவாத தாக்குதல் நிகழ்வாகக் கருதி, மத்திய அரசு தேசியப் பாதுகாப்பு முகமையை விசாரணைக்கு இறக்கி உள்ளது. வேறு அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications