5 பிள்ளைகளும் பட்டினியில் வாடுவதை பார்க்க சகிக்காமல் பெண் விவசாயி தீக்குளித்து தற்கொலை
மும்பை: மகாராஷ்டிராவில் 5 குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் வறுமையில் வாடிய பெண் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள அம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் மனிஷா கட்கல்(40). விவசாயியான அவருக்கு 5 குழந்தைகள். கணவருடன் சேர்ந்து மனிஷா விவசாயம் செய்து வந்தார். வறட்சியால் வாடும் அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரக்ஷாபந்தன் பண்டிகை அன்று மக்கள் சந்தோஷமாக இருக்க மனிஷாவோ தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு இல்லையே என்ற கவலையில் இருந்தார். குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தினம்தினம் தவிப்பதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார் மனிஷா.
இதையடுத்து அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி பலியானார். மகாராஷ்டிராவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மராத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் தான் மனிஷாவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இறந்துவிட்டாலும் அவரது கணவரும், குழந்தைகளும் தற்போதும் சாப்பிட உணவு இன்றி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.