மல்யாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பணம் ஊ..ஊ..!
டெல்லி: மல்யாவின் கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து கடனை திரும்ப பெற முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டதாக யுனைட்டட் வங்கி அறிவித்துவிட்டது.
மல்யாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு யுனைட்டட் வங்கி உட்பட மொத்தம் 17 வங்கிகள் ரூ.7500 கோடி கடன் கொடுத்திருந்த நிலையில், இதுவரை, அந்த வங்கிகள் தலைகீழாக உருண்டதன் பலனாக ரூ.1000 கோடியை மட்டும் வசூலித்துள்ளன. ஆனால், அதற்கு மேல் ஒரு பைசாவையும் அந்த வங்கிகளால் வசூலிக்க முடியவில்லை.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் யுனைட்டட் வங்கி மேலாண் இயக்குநர் பி.சீனிவாஸ் கூறுகையில், கிங்பிஷரிடமிருந்து வசூலிக்க முடியும் என்று எங்களுக்கு தோன்றவில்லை. மும்பையிலுள்ள கிங்பிஷர் கம்பெனி பில்டிங்கை விற்பதன் மூலம், மேலும் சில கோடிகளை மட்டுமே எங்களால் சேகரிக்க முடியும்.
நாங்கள் கிங்பிஷருக்கு ரூ.400 கோடி கொடுத்திருந்தோம். ஆனால் அவர்களிடம் வசூலிக்க முடிந்தது ரூ.80 கோடிதான் என்று அவர் கூறியுள்ளார்.
மல்யா நிறுவனம், பஞ்சாப் தேசிய வங்கி மற்றும்ம் ஐடிபிஐ வங்கிகளிடமிருந்து தலா ரூ.800 கோடிகளை கடனாக பெற்றிருந்தது. பேங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ரூ.650 கோடியும், பேங்க் ஆப் பரோடாவிடமிருந்து ரூ.550 கோடியும் கடனாக பெறப்பட்டது. சென்ட்ரல் வங்கியிடமிருந்து ரூ.410 கோடி கடன் பெற்றிருந்தது.