சாமர்த்தியமான காய் நகர்த்தல்கள்.. உ.பி.யில் பாஜக ஜெயிக்க 10 காரணங்கள்!
டெல்லி: உத்தர பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றிபெற 10 முக்கிய காரணங்களை அடுக்குகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்த காரணங்கள் இவைதான்.
2014 மக்களவை தேர்தலில் உ.பியில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு மோடியின் பிம்பம் ஒரு காரணம். இம்மு்றையும் மோடி அலை உத்தரபிரதேசத்தில் வீசியுள்ளதாகவே கூறுகிறார்கள்.
அதிகமாக அறியப்படாவிட்டாலும், உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நியமித்தது ஒரு முக்கிய நிகழ்வாகும். யாதவர்களை தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் கணிசமானோர் கேசவ் பிரசாத் மவுரியா ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது ஜாதி ஓட்டுக்கு பயன்பட்டது.
ஜாதிவாரி வேட்டை
உ.பியில் 19 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட, பிராமணர்கள், தாக்கூர் போன்ற உயர் ஜாதியினர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதும், சமூக இன்ஜினியரிங்கில் கவனம் செலுத்தியது பாஜக. யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கியது பாஜக. இந்த வாக்கு வங்கியை முழுமையாக பயன்படுத்தியது பாஜக.
கூட்டணியின் முக்கியத்துவம்
பாஜக அப்னா தள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது. பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது.
தேர்தல் பிரசாரம்
நரேந்திர மோடி, அமித்ஷா, கேசவ் பிரசாத் மவுரியா, ராஜ்நாத்சிங், உமா பாரதி மற்றும் கல்ராஜ் மிஷ்ரா ஆகிய 6 பேரின் படங்கள் மட்டுமே தேர்தல் பிரசார போஸ்டர்களில் காணப்பட்டன. இதில் இருவர் மேல் ஜாதியினர், இருவர் யாதவர் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர். இதை பார்த்து பார்த்து வடிவமைத்தது அமித்ஷா. பிரசாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரசாரம் செய்தனர்.
பிற கட்சிகளை உடைத்தல்
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ப்ரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, மாயாவதி கட்சியின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுனா ஜோஷி கூட பாஜக பக்கம் சேர்ந்துவிட்டார். எந்த பகுதிகளில் கட்சி வீக்காக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்கள் கவர்ந்து வந்து இறக்கப்பட்டனர்.
ஹிந்துத்துவா
பாஜகவின் பலமான இந்துத்துவா வாக்குகளை ஒன்றிணைப்பதற்காக, ஒரு முஸ்லிமுக்கு கூட அக்கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. மோடியும், அமித்ஷாவும் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திரள செய்யும் வகையிலான பிரசாரத்தை மேற்கொண்டனர். ரம்ஜானுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டால், தீபாவளிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் மோடி. கசாப்பிடமிருந்து உ.பி விடுதலை பெற வேண்டும்.. கசாப் என்றால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் முதல் எழுத்துக்களை வைத்து சொல்கிறேன். வேறொன்றும் இல்லை என்றார் அமித்ஷா.
பங்காளி சண்டை
சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி நடுவே புரிதல் இல்லை. சில தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி பெறவே விரும்பியது. அதை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் உள்ளூர் நிர்வாகிகள் காங்கிரசுக்கு எதிர்த்து வேலை பார்த்தனர்.
ஆட்சிக்கு எதிரான அலை
உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி அரசுக்கு எதிராக மக்களிடையே எழுந்த கோபமும் பாஜக வெற்றிக்கு ஒரு காரணம். தந்தை மகனே கட்சிக்காக சண்டை போட்டதால் ஆட்சி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.
முதல்வர் வேட்பாளர்
பீகாரை போலவே உ.பியில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் பாஜக தப்பு செய்துவிட்டதாக விமர்சகர்கள் கூறினர். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என கூறாமல் தேர்தலை சந்தித்து பாஜகவுக்கு சுபமாகிவிட்டது. ஏனெனில் பாஜக நம்பிய அனைத்து ஜாதியினருமே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக யாரையாவது அறிவித்திருந்தால் எஞ்சிய ஜாதியினர் ஜகா வாங்க வாய்ப்பிருந்தது.