இந்திய ரயில் பயணத்தால் நுரையீரலே போயிடுச்சாம்.. பிரபல அமெரிக்க யூடியூபர் மருத்துவமனையில் அனுமதி
பூடான்: அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர், இந்தியாவில் ரயில் பயணம் செய்ததால் தனக்குக் கடுமையான சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அவருக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கப் பல லட்சம் வெளிநாட்டினர் இந்தியா வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தியாவில் மிகச் சிறப்பான ஒரு அனுபவம் கிடைக்கிறது. இந்தியாவின் பன்மைத்துவம் குறித்து அறிந்து கொள்ளச் சிறப்பான வாய்ப்பாக இது அமைகிறது. இருப்பினும், ஒரு சிலருக்கு மோசமான அனுபவம் ஏற்படுகிறது.

யூடியூப் பிரபலம்
அப்படித் தான் இங்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்களில் பயணம் செய்ததால் தனக்குக் கடுமையான சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிக் மேடோக். இவருக்குச் சமூக வலைத்தளங்களில் கணிசமான பாலோயர்ஸ்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்தார். இதற்கிடையே கடுமையான சுவாசத் தொற்று காரணமாகத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தான் மேற்கொண்ட 15 மணி நேர ரயில் பயணமே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம் இல்லை
கடந்த 6 ஆண்டுகளாகப் பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், இதுபோல ஒரு மிகவும் சுகாதாரமற்ற அனுபவத்தை எதிர்கொண்டதே இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிச்சயம் இதுபோல மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய ஸ்லீப்பர் ரயிலில் ஒரு முறை செல்லுங்கள்.. பிறகு மறக்கவே மாட்டீர்கள்.." என்ற கேப்ஷனுடன் மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தான் வாரணாசியிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு மூன்றாவது ஏசி பெட்டியில் பயணித்ததாகவும் அது மிக மோசமான அனுபவமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரபர குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் இந்தியாவை நேசிக்கிறேன். அன்பான மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட மக்களின் நாடு இந்தியா.. இயற்கைக்காட்சிகளும் செழுமையான மற்றும் புனிதமான வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. அதேநேரம் வாரணாசியிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு எனது 15 மணி நேர ரயில் பயணம் (3ஆம் வகுப்பு ஏசி) என்பது எனது 6 வருடப் பயணத்தில் மிகவும் மோசமான அனுபவங்களில் ஒன்று. உயர் வகுப்பு கிடைக்காததால் இதில் பயணித்தேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
நிக் மேடோக் இப்போது பூட்டானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் மேலும் தனது பதிவில், "இந்த ரயில் பயணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, பூட்டானில் எனக்குக் கடுமையான சுவாசத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நான் இப்போது நன்றாக இருக்கிறேன், ஆனால் அது முழுமையாகக் குணமாக இன்னும் டைம் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் தனது வாரணாசியிலிருந்து நியூ ஜல்பைகுரி பயணம் குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ரயிலின் கழிப்பறையின் மோசமானதாகவும் தூய்மை இல்லாமலும் இருப்பது போல அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்தப் பயணம் முடிந்து 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு ஆண்டுகளில் 120 நாடுகளுக்குச் சென்றுள்ள மேடோக்கின் இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications