குஜராத் புதிய முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார்... துணை முதல்வரானார் நிதின்படேல்!
அகமதாபாத்: குஜராத் மாநில புதிய முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றுள்ளார். அம்மாநில ஆளுநர் ஒ.பி.கோஹ்லி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து, குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையுடன் பதவியேற்றார் ஆனந்தி பென் படேல். நவம்பர் 21ம் தேதியுடன் ஆனந்தி பென்னுக்கு 75 வது வயது பிறக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த விஜய் ருபானி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என்பதால் நிதின் படேலுக்கு பதிலாக இவர் முதல்வர் பதவிக்கு தேர்வானதாக கூறப்படுகிறது.
பின்னர், குஜராத் ஆளுநர் ஒ.பி.கோஹ்லியைச் சந்தித்த விஜய் ருபானி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய் ருபானிக்கு ஒ.பி.கோஹ்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் குஜராத் மாநில துணை முதல்வராக நிதின் படேல் பதவியேற்றார்.
யார் இந்த விஜய் ருபானி:
ரங்கூனில் (தற்போதைய யாங்கூன், மியான்மர்) 1956-ல் பிறந்த ருபானி பின்னர் பெற்றோருடன் ராஜ்கோட்டில் குடிபெயர்ந்தார். பள்ளி பருவத்திலேயே ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்து, 1971-ல் பாஜகவில் ஐக்கியமானார். பின்னர் கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்த ருபானி 2014-ல் ராஜ்கோட் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். கடைசியாக கடந்த பிப்ரவரி 19-ல் மாநில பாஜக தலைவர் பதவிக்கு உயர்ந்து இன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications