விராட் கோலி எனக்கும் ஃபேவரைட்.. ராணுவத்தின் வலிமையை விளக்க கிரிக்கெட் ரெஃபரன்ஸ் சொன்ன ராஜிவ் கய்!
டெல்லி: இந்தியாவின் தரை, வான், கடல் பாதுகாப்பை விளக்க லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், கிரிக்கெட் ரெஃபரென்ஸை பயன்படுத்தி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை செயல்படுத்தி பயங்கரவாத முகாம்களை நொறுக்கியது. இந்தியா செயல்படுத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக முப்படைகளின் டிஜிஎம்ஓக்கள் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்
ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் போது முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு முழுமையாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் குறிவைக்கும் போக்கு அதிகரித்திருந்தது.
பல அடுக்கு கவுன்ட்டர் - ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் தாக்குடலுக்கு இந்திய தரப்பு பதிலடிக்கு தயாராக இருந்தது. பாகிஸ்தான் விமானப்படை தளங்களை நம் படைகள் சேதப்படுத்தின. அதேநேரத்தில், அனைத்து இந்திய விமானப்படை தளங்களும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.
எதையும் வீழ்த்த ரெடி
இந்தியா மீதான தாக்குதலின்போது பாகிஸ்தான் தரப்பு சீன ஏவுகணைகளை பயன்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் அனைத்து ராணுவ தளங்களும், அனைத்து நிலைகளும் தொடர்ந்து முழுமையாக செயல்பாட்டில் உள்ளன, தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால பணிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளன. பாகிஸ்தான் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த நாம் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவின் இந்த ராணுவச் செயல்பாட்டுக்கு 140 கோடி இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலுமாக விமானங்களை இயக்கினர். போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது." என்றார்.
கிரிக்கெட் ரெஃபரென்ஸ் சொன்ன டி.ஜி.எம்.ஓ
மேலும் பேசிய லெப்டினண்ட் ஜெனரல் ராஜிவ் கய், "விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை பார்த்தேன். ஏராளமான இந்தியர்களைப் போல, அவர் எனக்கும் ஃபேவரைட் வீரர்தான். 1970களில் ஆஷஸ் தொடரின் போது, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆஸ்திரேலியாவின் 2 புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி, இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை தகர்த்துக் கொண்டிருந்தனர்.
நான் சொல்வது புரியும்
அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் 'from ashes to ashes and from dust to dust... தாம்சன் உங்களை வீழ்த்தவில்லை என்றால் லில்லி கட்டாயம் வீழ்த்துவார்' என்று ஆஸ்திரேலியர்கள் ஒரு பழமொழியையே உருவாக்கினர்.
லேயர்களை (இந்திய பாதுகாப்பு அடுக்கு) கூர்மையாக கவனித்தால் நான் சொல்ல வருவது புரியும். எல்லா லேயர்களையும் சமாளித்து கடந்து செல்ல முடிந்தாலும், ஏதாவது ஒன்று உங்களை பிடித்துக்கொள்ளும்." என இந்தியாவின் தரை, வான், கடல் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.












Click it and Unblock the Notifications